Monday, 28 December 2015

குல தெய்வம்

இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது குல தெய்வம் பற்றியே. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் ஒன்று இருக்கும். வழி வழியாக சொல்லப்பட்டு நாம் தெரிந்து கொண்டிருக்கும் தெய்வம். நமக்கே நமக்கென்று அருள் புரிய காத்திருக்கும் தாயுள்ளம் கொண்டது. நமது குடும்பத்தின் மூத்த உறுப்பினர் தெய்வசக்தியுடன் இருந்தால் என்ன செய்வோம். தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்போம். வேண்டியதெல்லாம் கேட்போம். ஒவ்வொரு பிரச்சினைக்கும் அங்கேதான் சரணடைவோம். இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு விசேசத்திற்கும் வருந்தி அழைப்போம். எந்த இக்கட்டிலும் கை விடமாட்டார் என்பதும் உறுதி. இவை அத்தனையும் குல தெய்வத்திற்கும் பொருந்தும்.

       என்னவோ தெரியவில்லை, சிலர் மட்டுமே இந்த முக்கியமான தெய்வ சக்தியை மறவாமல் வழிபடுகிறார்கள். மற்றவர்கள்...? அதற்கு பல காரணங்கள் உள்ளன. வேலை, வியாபாரம் என்று பொருளீட்டல் பயணத்தில் வெகு தொலைவு சென்று விடுவது. குடும்ப உறுப்பினர்கள் அனவரும் வெவ்வேறு திசைகளில் இருப்பது. குலதெய்வத்தை கும்பிட அனைவரும் ஒன்று சேர்ந்து செல்ல வேண்டும் என்பது மரபு. முடிந்தவரை இதனை பின்பற்றலாம். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை சென்று பார்ப்பதே நல்லது. நம் குழந்தைகள் வருகிறார்களா என்று ஒரு தாய் போல நாம் வருவதற்காக காத்திருக்கும். தாயை தள்ளி வைத்து மைந்தன் அமைதி அடைவது ஏது?

      முக்கியமான வேண்டுதல்கள் நிறைவேற்றப்போகும் போதும், தல யாத்திரைகள் செல்லும் போதும் குலதெய்வத்தை முதலில் வணங்கிக் கிளம்ப வேண்டும். வீட்டிலேயே பூஜை செய்யலாம். ஒரு உண்டியல் வைத்து அதற்கு சிறிய தொகை ஒன்றை காணிக்கையாக சேர்த்து , உண்டியல் நிரம்பியதும் உரிமைபட்ட குலதெய்வம் கோவிலில் சேர்ப்பிக்க வேண்டும். தல யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடியும். அதே போல திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு முன் வீட்டிலேயே ஒரு வெள்ளிக் கிழமையன்று பொங்கல் வைத்து பிரார்த்திக்க வேண்டும். இனிதே நடக்கும். நேரில் செல்ல தோது படவில்லையென்றாலும் கோவிலுக்கு பத்திரிக்கை அனுப்பி விட வேண்டும். திருப்பதி வரும் பக்தர்களுக்கு கூட தேவஸ்த்தான வேண்டுகோளில் குலதெய்வம் வணங்கிய பின் கோவிலுக்கு வர வேண்டும் என்று உள்ளது. குல வழக்கப்படி சிவராத்திரியன்று வணங்கலாம். அல்லது இருந்த ஊரிலேயே ஆடி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமையன்று மாவிலக்கு செய்து பிரியமுடன் வணங்கலாம்.

        வீட்டில் திருமணத்தடை , சந்தான பிராப்தி இன்மை இவை இருந்தால் குல தெய்வ வழிபாடு சரி செய்து விடும். சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள் - குலதெய்வத்தை வழிபடாத கோளாறுதான் இந்த தடைகள் என்று. ஆனால் அது அப்படியல்ல நமக்கு உள்ள கெட்ட நேரம்தான் இதற்கெல்லாம் காரணம். அதனை சரி செய்ய குலதெய்வம் அருள் புரியும். நமக்கு எதிரான அத்தனை துர் சக்திகளையும் அழிக்கும் வல்லமை உடையது. தன் பிள்ளைகளின் நலனுக்காக அத்தனை தெய்வத்திடமும் வேண்டுகோள் வைக்கும். அதனால்தான் நம் நல்வரவிற்காக வருடந்தோறும் காத்திருக்கும். புத்தாண்டு பிறக்கப்போகிறது, முதல் வேண்டுதலாக குலதெய்வத்தினை வணங்குவோம். முடிந்தால் வருட இறுதிக்குள் ஒருமுறை சென்று சிறப்பித்து தாய் மனதை குளிரச் செய்யுங்கள்.

 -- நம் குலதெய்வம் பற்றித் தெரியவில்லை எனில் பெரியோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய ஜாதகம் கூட குலதெய்வத்தை சொல்லிவிடும். சரியான ஜோதிடரை அணுகி தெரிந்து கொள்ளலாம். 

வளம் தரும் வயிரவன்

ஈஸ்வரனின் ஆதி சொரூபங்களில் ஒன்று. வயிரவன், சட்டைனாதர், கால பைரவர், சேத்திர பாலன் அனைத்தும் மற்ற சொரூபங்கள். வயிரவனின் அருள் கிட்டினால் இல்லத்தில் அத்தனையும் நிறையும். மகிழ்வு பொங்கும் என்பது உண்மை. எனக்குத் தெரிந்து , திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி அருகில் வயிரவன்பட்டியில் வயிரவன் அருள் பாலிக்கிறார். பௌர்ணமி அன்றும் தேய்பிறை அஸ்டமி அன்றும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். சிவனை வணங்கினால் மோட்சம் மட்டுமே கிட்டும் , பொருளாதார சம்பந்தமான வேண்டுதல்கள் அவரிடம் கேட்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், வயிரவன், தாயின் கருணையுடன் நம் இல்லத்தை கவனித்துக் கொள்வார். அவருக்கு விருப்பமானது கோபத்தை தவிர்த்து அனைவரிடமும் இன்முகம் காட்டுவது.
ஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம்

தனம் தரும் வயிரவன் தளிரடி பணிந்திடில் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடில் மகிழ்வுகள் வந்துவிடும்
சினம் தவிர்த்தன்னையின் சின்மய புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளம்தர வையகம் நடந்தான் வாரியே வளங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் காணகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

முழு நிலவதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுற செய்திடுவான்
முழு மலர் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தை சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான் மழையெனவே வளங்களை அருள்வான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவையும் தனக்குள்ளே வைப்பான் பூரணனன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூஜைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆண்வத்தலையினை கொய்தான் சத்தொடி சித்தானான்
புதரினில் பாம்பை தலியினில் வைத்தான் புண்ணியம் செய் என்றான்
பதரினை குவித்து செம்பினை எரித்தான் பசும்பொண் இடுவென்றான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய் 
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களை தந்திடுவாய்
ஜெய ஜெய வைரவா ஜெகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பௌர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீப்த்தை ஏற்றிவைத்து பதினெட்டு தடவை பாராயணம் செய்தால், தன விருத்தி கிட்டும். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவல் பாயாசம் செய்து நிவேதிக்கலாம். அளவற்ற கீர்த்தியையும், தனத்தையும் தரும் இந்த பூஜையை விடாமல் செய்து வளம் பெறுங்கள்.